Sunday, December 15, 2013

அடிக்கொருதரமான அதிர்ச்சிகள்...





"எனக்குப் பொண்ணுதான் வேணும்"

"இல்ல...எனக்குப் பையன்தான் வேணும்"

"இல்ல...இல்ல... எனக்கு உன்னைப்போல அழகான பொண்ணுதான் வேணும்..."

" ச்சீப் போங்க...எனக்குப் பையன்தான் வேணும்...அதுவும் ரெட்டைக் குழந்தைங்களா..."

- இரவு மணி பத்தைத் தாண்டியிருந்தது.

பக்கத்து அறையின் தொலைக்காட்சி சீரியலில்...

நிறைமாதக் கர்ப்பிணி மனைவியும் கணவனும் மிகுந்த காதலோடு ஒருவரையொருவர் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

அந்த வால்யூம் எகிறாத சின்னச் சத்தத்திலும்,

எனது அறையில் -

தனித்துப் படுத்திருந்த என் தூக்கம் தொலைந்திருந்த நிலையில், மனசு மட்டும் கனத்துப் போவதை உணர்ந்துகொள்ள முடிந்தது.

"எனக்குப் பொண்ணுதான் வேணும்"

"இல்ல...எனக்குப் பையன்தான் வேணும்"

- இன்றைய அங்கத்தின் இறுதிக் கட்டமோ...?

ரொம்ப நேரமாகத் தொடர்கிறது அந்த புதுமணத் தம்பதிகளின் செல்லச் சண்டை.

அடுத்த அங்கத்தின் எதிர்பார்ப்பை மிகைப்படுத்தி,

அடுத்த சில விநாடிகளில் "தொடரும்" போட்டு.இன்றைய அங்கத்தை நிறைவு செய்யப் போகிறார்கள் போலும்.

அனேகமாக...அடுத்த அங்கத்தில்,

அந்த நிறைமாதக் கர்ப்பிணியை ஏதோவொரு விபத்துக்குள் தள்ளிவிட்டு...அவள் கருவைச் சிதைத்து...அவளையொரு துர்ப்பாக்கியவாதியாகக் காண்பிக்கவும் கூடும்.

நீண்ட நெடுகாலம் ஓட்டுவதற்குரிய உத்தியில் அனேக சீரியல்கள் இப்படித்தான் அடிக்கொருதரம் அதிர்ச்சிகளைத் தந்து கொண்டிருக்கின்றன.

சீரியல்தான் என்றாலும்...

ஒரு கர்ப்பிணியின் கருவும்,அவள் எதிர்பார்ப்பும் ஒருசேரச் சிதைவதை
(வெறும் கற்பனைதான் என்றாலும்) மனசு ஏற்றுக்கொள்ள மறுக்கத்தான் செய்கிறது.

எப்படியோ...இப்போதைக்குத் தூங்கப் போவதில்லை நான்.

No comments:

Post a Comment