நவீன குடியரசில், பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு உலகம் தழுவிய ஒரு முறையாக தேர்தல் கடைப்பிடிக்கப்படுகிறது.
தேர்தல்கள் என்பவை 17வது நூற்றாண்டு தொடங்கி நவீன பிரதிநிதித்துவக் குடியாட்சியில் வழக்கமான ஒரு செயல்பாடாகத்தான் இருந்து வந்துள்ளன.
தேர்தல் என்பது, ஒரு நாட்டின் மக்கள் பொது வாழ்வில் பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனி நபரைத் தேர்ந்தெடுக்க முடிவெடுக்கும் செயல்முறை எனும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமையாகும்.
இந்த ஒழுங்கு முறைமையின் நற்பண்புகள் நாறிப்போயுள்ள நிலைமையையே இன்று நம் நாட்டில் அதிகம் அவதானிக்க முடிகிறது.
ஜனநாயகம் மறுதலிக்கப்பட்டு இன்று பணநாயகம் வீற்றிருக்கும் விரிப்பில்தான் அதிகம் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
இனவாதம், கூட்டணி,பேரம் என சுயநல அமிலத்தில் அமிழ்ந்து கிடக்கும் தேர்தல் களத்தில்.... கடவுள், அம்மா,அப்பாக்களையும் மிகைத்து அதிகம் இன்று அரசியல் மந்திகளைத்தான் சிலர் கும்பிடவும், வழிபடவும் செய்கிறார்கள் என்பது துயரத்தின் உச்சம்.
திஸ்ஸ அத்தநாயக்காக்கள் மீளவும் ஐ.தே.கவில் இணைந்து கொண்டிருப்பது அருவெறுக்கத்தக்க அரசியலின் இன்னுமோர் துளி விஷம்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித், கோத்தா, அநுர....யாரை யார் வெல்லுவாரோ?
எவர் வென்றாலும் அழுத்திச் சொல்லுமளவில் எதுவும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்பதே நிஜம்.
முறையான தேர்தல் அமைப்புக்கள் இல்லாத இடத்தில் அவற்றை அறிமுகப்படுத்துவது அல்லது அவை இருக்கும் இடத்தில் அவற்றின் நியாய முறை அல்லது பயனை மேம்படுத்துவது சிரமமாகும்.
இந்நிலையில், வாக்காளப் பெருமக்கள் யாராயினும் நா காப்பதே சிறந்ததாகப் படுகிறது.
வாக்காளர்களை கோவேறு கழுதைகளாக நினைக்கும் அரசியல்வாதிகளின் மனப்போக்கில் மாற்றங்கள் நிகழாதவரைக்கும்.... நாம் முதுகில் சுமக்க நேரிடுவது இயலாமை, ஏமாற்றம், காழ்ப்புணர்ச்சிகளின் எச்சங்களாகத்தானிருக்கும்.
03 October 2019
- ரிஸ்கி ஷெரீப்
- ரிஸ்கி ஷெரீப்
03 October 2019
