Sunday, December 15, 2013

ஜனநாயக விரோதியும் பலஹீனமான எதிர்க்கட்சியும்....



 

 


வெறுத்துப் போயிருக்கும் முஸ்லிம்கள்

ருகாலம்... அசைக்க முடியாக் கோட்டையாகத் தலைநிமிர்ந்து.... கம்பீரமாக இருந்த...நம் நாட்டின் வரப்பிரசாதமான - மும்மதத்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிகம் நேசித்த அரசியல் கட்சி ஐ.தே.க.

ஐக்கிய இராச்சியத்திடமிருந்து சுதந்திரம் அடைந்த கையோடு இலங்கையில் முதல் அரசை நிறுவிய பெருமைக்குரிய அதேநேரம், பெருமைக்குரிய ஜாம்பவான்கள் உள்வாங்கப்பட்டிருந்த இலங்கை தேசிய காங்கிரஸ்,சிங்கள மஹாசபா,முஸ்லிம் லீக் ஆகியவற்றின் கூட்டாக உருவெடுத்த கட்சி.

1947-1956,1965-1970,1977-1994 என்று சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் 33 வருட காலம் தனித்து ஆட்சியமைத்ததோடு மட்டுமல்லாமல்,ஒருகாலம் (1977ல்) பாராளுமன்றில் 5/6 பெருன்பான்மையையும் தன்வசப்படுத்தித் தனித்து மிளிர்ந்த கட்சி.இன்று...

 யார் கண் பட்டதோ... சாபமோ...செய்வினையோ.... ரணில் தலைமையில் மீண்டும் எழுந்து நிற்க முடியாத அளவில் தொய்ந்துபோய், பக்கவாத நோயாளியாக முள்ளந்தண்டில் காயப்பட்டுச்  சுருண்டுபோய் ...

ஒரு ஜனநாயக நாட்டின் எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொள்ளவும் முடியாத வக்கற்ற அவல நிலைக்கும் ஆட்பட்டு உட்கார்ந்திருக்கிறது.

 
கட்சிக்குள் எவர் சொல்பேச்சும் கேட்காமல்...எவரையும் மதிக்காமல்  ...அதேநேரம், தனது எதிர்க்கட்சிப் பதவிக்கான வரப்பிரசாதங்களையும் சுகபோகங்களையும் தங்கு தடையின்றி அனுபவிக்க...ஆளுந்தரப்பினருடன் திரைமறைவு உறவுகளைப் பேணிவரும் ரணிலுக்கு,

தனது சுய நலன்களுக்கு முன்னால்,நாளுக்கு நாள் நாடு குட்டிச் சுவராவது குறித்து கிஞ்சித்தும் கவலையில்லை என்பது ,இவருக்கு எதிராக இன்று பல தரப்பினரும் முன் வைக்கும் குற்றச்சாட்டுக்கள்.

உண்மைதான்.

அடிமட்டத்துப் பாமரர்கள்கூட அருவெறுப்பான - அசிங்கமான வார்த்தைகளில் விமர்சிக்கும் அளவில்...அண்மைக்காலங்களில் தன்னலம்மிக்கவராகத்தான் அதிகம் தெரிகிறார்...தற்போதைய சூழ்நிலையில் நம்நாட்டு எதிர்க்கட்சித் தலைமைக்கு லாயக்கற்ற இந்த " சுயிங்கம் மாமா".

இந்த ஜென்மத்தில் மஹிந்த ஆட்சியைக் கலைக்கவோ, புதியதோர் ஆட்சியை அமைக்கவோ இவரல் முடியாது என்பது இவர் மட்டுமன்றி இன்றைய சிறுகுழந்தையும் அறிந்ததோர் விடயமாகத்தான் இருக்கும் பட்சத்தில்...கைக்கு எட்டிய பதவியைத் துறந்து,,,அதன் சுகபோகங்களை விட்டு...அரசியலில் தோற்றுப்போனதோர் ஜடமாக சும்மா வீட்டில் போய் உட்காருவதற்கும் மனிதர் தயாரில்லை.

அப்படி,கட்சி மீது காதலும்...தேசத்தின் மீது உண்மையான பற்றும் இருந்திருக்குமேயானால்,கடந்த இரு தசாப்த காலமாகத் தொடர் தோல்விகளைச் சந்தித்து,பொதுமக்களின் ஏளனங்களுக்குள்ளாகிப்போய் தற்போது அடிவாங்கவும் சக்தியற்று...நலிந்து போயிருக்கும் ஐ.தே.கவை, என்ன பாடுபட்டாவது...தகுதியும் மக்கள் செல்வாக்கும் மிகுந்த ஒருத்தரை அல்லது பலரை முன்தள்ளி... செப்பனிடும் பணியை அவர் முன்னெடுத்திருக்க வேண்டும்.அடுத்தவர்களின் ஆரோக்கியமான ஆலோசனைகளுக்கு செவிசாய்த்திருக்க வேண்டும்.

மாறாக,போட்டியாக வந்து விடுவார்கள் என்கிற பயத்திலும், பொறாமையிலும்...மக்கள் செல்வாக்கும் ஆதரவும் மிக்க சஜித் பிரேமதாசாக்களையும்,கரு ஜெயசூரியாக்களையும் ,இம்தியாஸ் பாக்கீர்மாக்கார்களையும்,புத்திக பத்திரணகளையும் வளரவிடாமல் பதவி பறித்துப் புறந்தள்ளிச் சீரழிப்பதும்...

தயாசிறி ஜெயசேக்கர உட்பட்ட அரசியல் ஆளுமைமிக்க ஐ.தே.க.வின் 50க்கும் மேற்பட்ட செயல்திறனாளர்கள் மனம் வெறுத்துக் கட்சி தாவத் தூண்டியதும்....

அண்மைக்காலங்களில், கபீர் ஹாஷிம் போன்ற படித்த,பதவிகளுக்கு விலை போகாத கட்சி விசுவாசிகளோடு மோசமான அளவில் முரண்பட்டிருப்பதும்....


- இப்படி கட்சிக்குள் நிகழ்ந்தேறிய - நிகழ்ந்தேறும் இன்னும் பல உருட்டல் பிரட்டல் சித்து விளையாட்டுக்களுக்கும் பிரதான காரணகர்த்தாவென்று சகல தரப்பினரும் விரல் நீட்டக்கூடிய...நம் நாட்டின் இன்றைய முதல் ஜனநாயக விரோதியாக இருப்பது சாட்சாத் ரணில்தானென்றால் அது மிகையில்லை.

கொடுமையான ஆட்சியாளர்களால் மக்கள் சீரழிவுகளைச் சந்திக்க நேரும்போது... நாட்டைப் பாதுகாத்து...இறைமையை மதிக்கக்கூடிய சிறந்த ஆட்சியொன்றை அவர்கள் எதிர்பார்த்து நிற்பது பிரதான எதிர்க்கட்சியிடமிருந்துதான்.

இன்றைய சூழ்நிலையில் எல்லோரும் ஒரு ஆட்சி மாற்றத்தைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.ஆனால்...நம்பவும்...களமிறங்கவும்...கரங்களைப் பலப்படுத்தவும் உயிர்ப்பானதோர் எதிர்க்கட்சிதான் இல்லை. பாவப்பட்ட நம்நாட்டில்.

ஆளும் கட்சியும் வேண்டாம்.
எதிர்க் கட்சியும் வேண்டாம்.
கொள்கைகளற்ற அதேநேரம் வெறும் சந்தணக்குச்சிக்கே விலைபோகக்கூடிய...ஆளுங்கட்சிக்கு குடைபிடிக்கும் சிறுசிறு கட்சிகளும் வேண்டாம்.

பின்னே...எதிர்வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது?
இலங்கை வாழ் முஸ்லிம்களின் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி இதுதான்.

சிறுபான்மை முஸ்லிம்கள் வாக்களிக்காமல் விட்டுவிடுவதும்...இன்று இனவாதம் கக்கி...பெருன்பான்மை சமூகத்தை மூளைச் சலவை செய்துவரும் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பாகும்.

அதேநேரம்,
பலஹீனமான எதிர்க்கட்சிக்கு வாக்களித்தும்...ஆகப்போவது ஒன்றுமில்லை.ரணில் தலைமையில்...

முஸ்லிம்கள் வெறுத்துப் போய்த்தான் இருக்கிறார்கள்.

"என்ன செய்யலாம்?"


முஸ்லிம்கள் வெகுவாக குழம்பியும்தான் போயிருக்கிறார்கள்.

- மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்.

No comments:

Post a Comment