Sunday, December 15, 2013

நனைந்துபோன தீக்குச்சிகளாக... முஸ்லிம் தலைமைகள்




காகித வடிவத்தில் காட்சியளிக்கின்ற ஆயுதங்கள் தாம் என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கின்றன நமது முஸ்லிம் தலைமைகள்.

முஸ்லிம்களுக்கெதிரான இன ஒடுக்குதல்கள் மலிந்து...எல்லோரும் கதிகலங்கிப் போயிருந்த நிலையில்,

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ..நா.மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை, அனேக சிறுபான்மையினரும் ஏதோ ஒரு ஆபத்பாந்தவராகத்தான் எதிர்பார்த்திருந்தனர்.

இங்கு காலடியெடுத்து வைத்தவுடனேயே அம்மையார்,நீதியமைச்சர் என்கிற முறையில் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீமைத்தான் முதன் முதலாக சந்திக்கவும் செய்திருந்தார்.

நீதியமைச்சில் நடைபெற்ற மேற்படி இருவருக்குமிடையிலான பேச்சுவார்த்தையில்,அமைச்சர் ஹக்கீம் தன்னால் இயன்றளவு பிரயத்தனப்பட்டு அரசாங்கத்தைக் காப்பாற்ற முனைந்திருந்ததை,

பேச்சுவார்த்தைக்குப் பிறகான ஊடகவியலாளர் மாநாட்டில் "அந்த சட்ட மூலத்தின் அவசியத்தை உணர்த்தினேன்...இதற்காக அரசாங்கம் இப்படியொரு சட்டத்தைக் கொண்டு வரவிருக்கிறது..." என்று பிதற்றியதிலேயே உணர்ந்துகொள்ள முடிந்தது.

அரசாங்கத்தின் விசுவாசம்மிக்க நீதியமைச்சர் என்கிற அடிப்படையில் அது, அவரைப் பொறுத்துச் சரியாக இருந்தாலும்...

நாட்டின் தமிழ்,முஸ்லிம்,சிங்களவர் என்கிற அனைவருக்கும் பொதுவான அல்லது முள்ளிவாய்க்கால் அவலம் தொடர்பில் இன்றுவரை தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் சார் மனித உரிமை மீறல்களின் உண்மைத் தன்மையையும்,

சிறுபான்மை மீதான அரசாங்கத்தின் ஓரவஞ்சனை மற்றும் மாற்றாந்தாய் மனப்போக்குகள் குறித்தெல்லாம்...மனச்சாட்சிமிக்க நீதியமைச்சராக அவரால் ஏன் ஆணையரிடம் எடுத்துச் சொல்ல முடியாமல் போனது என்கிற கேள்வியும் தொண்டைக்குழி மீன் முள்ளாக உறுத்தவே செய்கிறது.

இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு பிரதான கட்சியின் தலைவர் என்கிற அடிப்படையில் கடமைப்பட்டவராக, முஸ்லிம்களுக்கு எதிரான இன்றைய பிரச்சினகளையாவது அவரோ அடுத்த முஸ்லிம் தலைமகளோ ஆணையரிடம் எடுத்து விளக்கியதாகவுமில்லை என்றே அறியக் கிடைக்கிறது.

யாரோ எவரோ...ஒரு குழுவோ முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து நவீப்பிள்ளையிடம் ஏதோவோர் அறிக்கை சமர்ப்பிக்கப் போவதாகவும் ஒரு செய்தியிருந்தது. என்னவாயிற்று எனத் தெரியவில்லை.

எப்படியோ,முஸ்லிம் தலைமைகள் அரசின் பாதுகாவலர்களாகத்தான் தம்மைக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

" முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகள் தொடர்பில் விளக்குவதற்கு எவருமே முன்வரவில்லை" என்று நவநீதம்பிள்ளையே கோடிட்டுக் காட்டும் அளவில் முஸ்லிம் தலைமகள் மவுனமாகத்தான் இருந்திருக்கின்றன என்பதை மட்டும் அறிய முடிகின்றது..

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்..சுமந்திரனுடனான இன்றைய சந்திப்பின்போதே அம்மையார் இதை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கின்றார். 

தீக்குச்சி தீண்டாமல்...உரசாமல் தீப்பொறி பறப்பதில்லை.
நமக்கான தீக்குச்சிகளோ அச்சத்தில் நனைந்து உறைந்து கிடக்கின்றன.

கண்கெட்ட பிறகான சூரிய நமஸ்காரமாய்...

மஹிந்தவை ஆயுள்கால ஜனாதிபதியாக்கும் பாவத்துக்கு உடந்தையாகி விட்டதாக,18வது திருத்தம் குறித்து இப்போதெல்லாம் தேர்தல் மேடைகளில் அழ ஆரம்பித்துள்ள ஹக்கீம்,

இனியொரு காலத்திலும் நினைத்தழக்கூடும்...நவநீதம்பிள்ளையுடன் கிடைத்த சந்தர்ப்பத்தையும் கை நழுவ விட்ட குறுகுறுப்பில்.


No comments:

Post a Comment