Monday, September 20, 2021

நலிந்தவர் மீதான சவாரியும்.... மாறும் கள நிலவரங்களும்

2005 ஜனாதிபதித் தேர்தலை வடக்கு தமிழர்கள் புறக்கணித்திருந்த போதும், .தே.. சார்பில் தனி வேட்பாளராகப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 4,706,366 (48.33%) வாக்குகளைப் பெற்றிருந்தார். இதே வடக்கு தமிழர்கள் ஆதரித்த 2010 ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்கா பொது வேட்பாளராகக் களமிறங்கி பெற்றுக்கொண்டது வெறும் 4,173,185 (40.15%) வாக்குகளைத்தான்.

 மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்

லிந்தவர் மீது மேற்கொள்ளப்படும் சவாரியாகவே அமையப்போகும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் கள நிலவரங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன.

அதிகாரக் கட்டமைப்புக்கள்மீது எவரும் கை வைக்காதவாறும், அவற்றை எவரும் தட்டிக் கேட்காதவாறும் முற்றிலும் நேர்த்தியான திரை மறைவில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வியூகங்கள் தந்திரோபாயம் கலந்து பின்னப்படுகின்றன.

கட்டுப்படுத்த முடியாத பொது மக்களின் விரக்தியை மேவி, பாமரர்கள் மீதும் ஏழைகள் மீதுமே இம்முறை விரோதமும் வன்முறையும் கோலோச்சும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நலிந்தவர் மீதும் எளிதில் இலக்காவோர் மீதும் வஞ்சம் தீர்ப்பது இலகுவானது என்பதற்கமைவாக, கிராமப்புற பொதுமக்கள் மற்றும் சிறு கட்சிகளைக் குறுக்கறுத்துத் திசை திருப்பிஇம்முறை தேசியவாதக் குரைப்பும், ஊளையும் கலந்த பல்லவியைப் பாடவும் முனைகிறது ஆளுந்தரப்பும் அதுசார் சிறு கட்சிகளும்.

இதேநேரம்,ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்  ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு தனது 10வது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக பல கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

தேனும், பாலும் தடவி,  நாட்டின் சகலதுறை மக்களுக்கும் மீட்சியை கொடுக்கும் ஒரு வரவு செலவுத் திட்டமாகவும் ஜனாதிபதி இதனைக் காட்ட முனைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் தெரிவித்துள்ளன..

அரச துறைசார் ஊழியர்கள், மாணவர்கள், ஓய்வூதியம் பெறுவோர் என சகல தரப்பினருக்கும் நிவாரணம் அளிப்பது போன்ற மாயத்தோற்றம் ஒன்றை காட்டவும் இதன் மூலம் மஹிந்த முனைந்துள்ளதாகவும், ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக் கொள்ளும் கபடத்தனத்தைத் தவிர வேறு எதனையும் இந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்க முடியாதென்றும் கூட்டமைப்பு பாராளுமன்றில் தெரிவித்துள்ளது.

மேற்படி முன்மொழிவுகளுக்கான பணத்தை மஹிந்த எங்கிருந்து எடுக்கப் போகின்றார் என்பது பற்றி அவரது உரையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும், அவரது வரவு செலவு திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்பாகவே தேர்தல் வந்து விடும், எனவே இலகுவாக மக்களை ஏமாற்றிவிட முடியும் என்பதும்தான் மஹிந்தவின்  எண்ணமென்றும் கூட்டமைப்பு பாராளுமன்றில் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியுமுள்ளது.

இதேநேரம், இலங்கையரின் வருடாந்த வருமானம் 3000 அமெரிக்க டொலர்கள் என்று வரவு செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவித்த தகவல்களில் உண்மைத்தன்மை இல்லையென்றும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

வரவு செலவுத்திட்ட வாசிப்பின் ஆரம்ப உரையின்போது ஜனாதிபதி இலங்கையரின் தனிநபர் வருமானம் 3000 அமெரிக்க டொலர்கள் என்றும், இன்னும் இரண்டு வருடங்களுக்குள் அதனை 7ஆயிரம் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவது அரசின் நோக்கம் என்றும் தெரிவித்திருந்தார்.

எனினும், ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்ட அறிக்கையில் இலங்கையில் நான்கில் ஒரு பகுதி மக்களின் வருட வருமானம் 730 அமெரிக்க டொலர்களை விடக் குறைவாக இருப்பதாகவே குறிப்பிடப்பட்டுள்ளதோடு, இவர்களின் நாளாந்த வருமானம் 260 ரூபா என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் தான் முன்வைத்த அறிக்கை மற்றும் அதன் அறிமுக உரை இரண்டுக்கும் இடையில் ஜனாதிபதி தனக்குத் தானே முரண்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

யதார்த்தம் தவறும் முரண்பாடுகளாயினும், இதுபோன்ற பொருளாதார மாயைகளூடாக, பொதுமக்களிடத்தில் ஏற்படும் ஆளுந்தரப்புக்கு சார்பான மனக்குழப்பம் ஆளுந்தரப்பை மீளவும் அதிகார பீடத்தில் அமர்த்தும் வல்லமை பெறும் என்றே அது நினைத்திருக்கிறது.

நலிந்த மற்றும் எளிதில் இலக்காகும் பாமர ஏழைகள் மற்றும் கிராமப்புற பொதுமக்களை குறிவைக்கும் லாவகமான தந்திரோபாயம் இது.

மட்டுமன்றி, , தனக்குப் போட்டியாக பலமான எதிரணியொன்று உருவாகாமல் பார்த்துக் கொள்வதிலும் கவனமாக இருக்கிறது ஆளுந்தரப்பு. ஆளுமை அரசியல் வழியாக பலமான எதிரணி உருவாகும் வாய்ப்புக்களை சிதைத்து வருவதாகவும் ஆளுந்தரப்பு மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன..

நலிந்த மற்றும் எளிதில் இலக்காகும் சிறு அரசியல் கட்சிகளைக் குறிவைத்து அல்லது அதனூடாக பிரதான எதிரணியை பலஹீனமாக்குவதே லாவகமான இத் தந்திரோபாயமாகும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஜெயிக்க வேண்டுமாயின், எதிரணியில் இருந்து சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுச்சின்னத்தில், பொது வேட்பாளர் ஒருவர்தான் களமிறங்க வேண்டும் என்கிறதோர் நிலைப்பாடே இருந்து வந்தது.

அடுத்த கட்டத்தில் அந்நிலைமை மாறி, பொது வேட்பாளருக்கு பொருத்தமான ஆளுமைமிகு அரசியல்வாதியைத் தெரிவதில் ஏற்பட்ட சிக்கல்களும் பஞ்சமும், பொது வேட்பாளராகவோ அல்லது தனி வேட்பாளராகவோ ரணில் விக்கிரமசிங்கதான் களமிறங்க வேண்டும் என்கிற சூழ்நிலையை தோற்றுவித்திருந்தது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, மாதுளுவாவே சோபித தேரர், முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா, சரத் பொன்சேக்கா எனப் பலரும் ரணிலுக்கு ஆதரவு வழங்குவார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் ஏதோ பிகு பண்ணினாலும், இறுதிக் கட்டத்திலாவது தமிழர் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும், ஏன் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட .தே.கவை ஆதரிக்கும் நிலைப்பாட்டுக்கு தம்மைத் தயார்படுத்தக்கூடும் எனவும் நம்பப்பட்டது.

பொதுச் சின்னத்தில் களமிறங்கும் பொது வேட்பாளரை விடவும், .தே.கவின் ஊடாக பொது வேட்பாளராகவோ அல்லது தனி வேட்பாளராகவோ ஒருவர் களமிறங்கும் பட்சத்தில் கூடுதலான வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் செளகரியமும் வாய்ப்பும் இருப்பதென்பதே இதற்கான அடிமூலமாகும்.

சாட்சாத் .தே.கவுக்கென்று ஸ்திரமும், பலமுமானதோர் வாக்கு வங்கி உண்டென்பதை எவரும் மறுக்க முடியாது. .தே.. தொய்ந்துபோன தருணங்களில் கூட வரலாறு இதனை நிரூபித்திருக்கிறது.

2005 ஜனாதிபதித் தேர்தலில், வடக்கு தமிழர்கள் புறக்கணித்திருந்த போதும் .தே.. சார்பில் தனி வேட்பாளராகப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 4,706,366 (48.33%) வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இதே வடக்கு தமிழர்கள் ஆதரித்த 2010 ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்கா பொது வேட்பாளராகக் களமிறங்கி பெற்றுக்கொண்டது வெறும் 4,173,185 (40.15%) வாக்குகளைத்தான்.

ஆக, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஈடாக, பொது வேட்பாளர் என்கிற பதம் விவாதத்துக்கு உரிய ஒரு பேசு பொருளாகத் தோன்றவில்லை.

யுத்த வெற்றியைத் தொடர்ந்து கிடைத்த மக்கள் செல்வாக்கை ஆளுந்தரப்பு எப்போதோ இழந்தாயிற்று. தவிர, மஹிந்தவின் குடும்ப ஆதிக்க அரசின்மீது பொதுமக்கள் தற்போது அதிருப்தியுற்றிருக்கும் அதேநேரம், .தே..வின் தற்போதைய புத்துணர்ச்சியும், ஆட்சி மாற்றமொன்றுதான் தேவை என்கிற பொதுமக்களின் ஏகோபித்த விருப்பும் இம்முறை .தே.கவுக்கான வாக்குகளை அதிகரிக்கவே செய்யும்.

கடந்த, மத்திய, மேல், தென், ஊவா மாகாண சபைத் தேர்தல்கள் நலிந்திருந்த .தே.கவின் வளர்ச்சியை ஏறுவரிசைப்படுத்தி, ஆளுந்தரப்பை இறங்குவரிசையில் பின்னடையச் செய்திருப்பதும் .தே.கவை மேலும் பலப்படுத்தி, ஆளுந்தரப்பை பயமுறுத்தியிருக்கிறது.

புலனாய்வுப் பிரிவின் ஆய்வுக்கு அமைய  இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு 44 இலட்சம் முதல் 46 இலட்சம் வாக்குகளே கிடைக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் புலனாய்வுப் பிரிவினர் மற்றுமொரு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதுடன், அந்த அறிக்கைக்கு அமையவே ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் ஜனவரியில் நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ரணிலுக்கு எதிராக மீண்டும் மும்முனைப் போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ளது. இது ஆளும் தரப்பின் தேவைக்கு ஏற்ப பலமான எதிரணியொன்று சிதைந்துபோகும் அபாயக் கட்டத்தையும் எட்டும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால் ஆதரவளிக்க முடியாது என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பொது வேட்பாளராக ரணில் நிறுத்தப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை எதிர்பார்க்க முடியாது என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என மாதுளுவாவே சோபித தேரரும் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இரண்டு தரப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேரடியாகவே இந்த விடயத்தை அறிவித்துள்ளதோடு, ஐக்கிய தேசியக் கட்சி வேறு ஓர் வேட்பாளரை நிறுத்தினால் ஆதரவளிக்கத் தயார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கே, இன்னுமோர் விடயத்தையும் சுட்ட வேண்டும். அதாவது….எதிர்வரும் சில நாட்களுக்குள் ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தை விட்டு வெளியேறப்போவதாக செய்திச் சேவையொன்று தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சியின்  பிரகாசத்தை மழுங்கடித்து, அதன் வெற்றிவாய்ப்பைத் தடுக்கும் நோக்கிலும், ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்கும் சதித்திட்டத்தின் அடிப்படையிலுமே ஜாதிக ஹெல உறுமயவை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வதாக உள்ள குற்றச்சாட்டையும் இங்கு மறுதலித்துவிட முடியாது.

இத்திட்டத்தின் பிரகாரமே, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான பிரேரணைகளை சாட்டாக வைத்து எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தை விட்டு ஹெல உறுமய வெளியேறவுள்ளது.

அதன் பின்னர் நாட்டின் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான கூட்டணி என்ற பெயரில் மாதுளுவாவே சோபித தேரர், சரத் பொன்சேகா, சரத் என் சில்வா, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் உதிரிக் கட்சிகளை இணைத்துக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கவும் ஹெல உறுமய  வியூகம் வகுத்துள்ளது.

இதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு சார்பான வாக்குகளை சிதறடித்து, ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றியை இலகுபடுத்துவது இதன் இறுதி நோக்கமென்று சொல்லப்படுவதையும் புறந்தள்ளிவிட முடியாது.

தேர்தலின் பின்னர் மீ்ண்டும் ஆளுங்கட்சியில் இணைந்து கொள்ளும்போது, ஹெல உறுமய முக்கியஸ்தர்களுக்கு அதிகாரமிக்க அமைச்சுப் பொறுப்புகளும், வேறு வரப்பிரசாதங்களும்கூட வழங்கப்படலாம்.

எத்தனைதான் முரண்டு பிடித்தாலும் ஆளும் தரப்பின் செல்லப் பிள்ளைகளான ஜாதிக ஹெல உறுமயவும், பொதுபல சேனாக்களும் ஏன் விமல் வீரவங்சவும் கூட ஒருபோதும் மஹிந்தவை உதறிச் செல்லத் துணியமாட்டார்கள்.

மஹிந்தவின் காலம்தான் இவர்களுக்கான பொற்காலம் என்பதை இருதரப்பும் அறிந்து வைத்திருக்கும் அளவில் ஒருவரில் ஒருவர் தங்கியேயிருக்கிறார்கள்.

மட்டுமன்றி, இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள பொதுபல சேனா, சிங்கள ராவய, ஹெல உறுமய, ராவணா பலய, பிக்சு பெரமுண , தர்ம விஜய பதனம, ஹெல ராவய உள்ளிட்ட சுமார் 53 கடும்போக்கு சிங்கள அமைப்புகள்  மஹிந்தவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த வாரம் கொழும்பு, பௌத்த மகா சம்மேளன மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

மஹிந்தவின் ஆட்சியில் மட்டுமே  சிங்கள பௌத்த நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்  என்கிற அடிப்படையில்,அவருக்கே எதிர்வரும் தேர்தலிலும் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக நாட்டின் அனைத்து விகாரைகள் வழியாகவும் அவ்வப்பிரதேச பொதுமக்களை அறிவுறுத்தி, மஹிந்தவுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க முயற்சிக்க வேண்டும் என்றும் இதில் கலந்து கொண்டிருந்த பிக்குமார்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் ஆட்சி வகித்த தலைவர்கள் பிரபாகரனை தோற்கடிக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும், அதனை முறியடித்ததற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரை வரலாற்று வீரா்களின் வரிசையில் இணைக்க வேண்டுமெனவும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவை வெற்றி பெறச்செய்து தேசத்தின் எதிர்காலத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே தனது நிலைப்பாடென்றும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்.

இம்முறை, பொதுவேட்பாளர் தொடர்பில் அதிக கவனத்தை ஈர்த்திருந்த சோபித தேரர், ஈற்றில் ரணிலுக்கு ஆதரவளிக்க முன் வந்திருந்த கட்டத்திலேயே, ஜாதிக ஹெல உறுமயவும், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் ஒருசேர அவரைச் சந்தித்து மீளவும் பொது வேட்பாளர் ஆசையில் எண்ணெய் ஊற்றி அவரது மனப்போக்கை மாற்றியிருக்கிறார்கள்.

ஆக, தனக்கான தளமொன்றைத் தேடி, . தே. கவைப் புறந்தள்ளி புறப்பட்டிருக்கிறார் சோபித தேரர். அவர் ஒரு பகடைக்காய்தான் என்றாலும், இந்தக் காய் நகர்த்தலில் தற்போதைக்கு ஹெல உறுமய வென்றிருக்கிறது.

இன்னொருபுறம், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகள் மஹிந்தவை ஆதரிக்க முனைப்புக் காட்டுவதில் அதிருப்தியுற்றிருக்கும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சந்திரிகாவோடு கூட்டமைக்கவும், அதனூடாக முன்னாள் பிரதம நீதியரசர் சிறாணி பண்டாரநாயக்கவை மூன்றாவது வேட்பாளராகக் களமிறக்கவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது வேட்பாளரின் வெற்றி சாத்தியமற்றதாயினும், இச்செயற்பாடு ஒரு பலமான எதிரணியின் உருவாக்கத்தைச் சிதைக்கும் அபாயம் உண்டு.

எப்படியோ, .தே.கவில் ரணில் களமிறங்காத பட்சத்தில், வெளியேயிருந்து அவரைப் புறக்கணிக்கும் பலர் அதே கட்சியின் புதிய ஜனாதிபதி வேட்பாளரோடு கைகோர்க்கக் கூடும். இது ஜனாதிபதி தேர்தல் களத்தில் மேலும் மாற்றங்களையும் ஏற்படுத்தும்.

அப்படி, .தே.கவின் புதிய வேட்பாளர் சஜித் பிரேமதாசவாகத்தான் இருக்குமென்றிருந்தால் ஜனாதிபதி தேர்தல் களத்தில் இம்முறை சூடு பறக்கும் அடையாளமும் தெரிகிறது.

ரணிலா? சஜித்தா? களமிறங்கப் போவது யாரென்று அடுத்த வாரம் பார்ப்போம்.(நிறைவு)

நவமணி வாரயிதழ்

 

 

 

 

 

.

 

 

No comments:

Post a Comment