ஜாதிக ஹெல உறுமயும் தொடர்ந்து அரசுக்கு தோள் கொடுக்குமாயின் இம்முறை இனவாத மற்றும் தேசியவாதப் பிரசாரம் களைகட்டவும் வாய்ப்புள்ளது. “ இலங்கையின் அரசியலையும், அதிகார பீடத்தையும் தீர்மானிக்கும் சக்தியை சிறுபான்மையினரிடத்தில் இருந்து பிடுங்கியெறிய வேண்டும்” என உதய கம்மன்பில தெரிவித்திருந்தமையின் ஆழ அர்த்தம் இதை மென்மேலும் வலுவூட்டுகிறது
இலங்கையில், ஜனநாயகத்திற்கும் தேர்தலுக்கும் எதுவிதத் தொடர்புமில்லை என்பதை வலுவாக உணர்த்தும் இன்னுமோர் தேர்தலாகவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது..
தேர்தலை நடத்தும் அறிவிப்பே மிகப்பெரிய சூதாட்டமாகத் தெரியும்போது, ஆளுந்தரப்பின் வெற்றியை நோக்கிய இலக்கில் ஜனநாயகப் பண்புகள் ரத்தம் கக்கிச் சாவும் அபாயம் இம்முறை நிறையவே தென்படுகிறது.
இந்நிலையில், அச்சமும் அரசியலும் தோய்ந்த தளத்தில் இருக்கும் பொதுமக்களை மூளைச்சலவை செய்து இருவேறு கோணங்களில், மாறுபட்ட இருவேறு கணக்குகளைப் போட்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை வெல்வதில் முனைப்புக் காட்டுகிறது ஆளுந்தரப்பு.
நடைமுறைச் சாத்தியமற்ற அதேநேரம் தேர்தலை இலக்காகக் கொண்டமைந்த வரவுசெலவுத் திட்டம், தேர்தல் கள நிலவரத்தை மையமாகக் கருதி பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் துறையிலான அதிரடி மாற்றங்கள், வடக்கு செல்லும் வெளிநாட்டவர் மீதான தடை, எதிர்க்கட்சிகளை மழுங்கடிக்கும் சேறுபூச்சுக்கள், அபரிமிதமான சலுகைகளை வழங்கத் துணிந்து நடாத்தப்படும் பங்காளிக் கட்சிகளுடனான பேரம் பேசுதல்கள், அரச ஊழியர்களுக்கு நம்ப மறுக்கும் விலையில் கார்களும், மோட்டார் சைக்கிள்களும், வடக்கில் சிலருக்கு காணி உறுதிகள், தோட்டத் தொழிலாளர்களுக்கு அவசர கதியில் ஐம்பதினாயிரம் வீடுகள்….அடிக்கல் நடுதல்கள், ஆச்சரியம்மிக்க விலைக்குறைப்புக்களும் சலுகைகளும்..…..இப்படி,
தேர்தல் காலத்தில் மட்டுமே பிரகாசிக்கும் நிலாக்களாக….இப்போதைக்கு எதையும் கொடுக்கத் தயாராகி ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை இலக்கு வைத்திருக்கிறது ஆளுந்தரப்பு.
இப்போதைக்கு வெற்றி மட்டுமே குறிக்கோள். அளிக்கப்படும் வாக்குறுதிகள் பற்றிப் பிறகு சிந்திக்கலாம் என்கிற நிலைப்பாடுதான் ஆளுந்தரப்பின் முதற் கணக்கு.
இப்படியான வாழ்க்கைச் செலவினைக் குறைக்கும் தற்காலிக சலுகைகள் மற்றும் அபிவிருத்தி பற்றிய அறிவிப்புக்களும் அடிக்கல் நடுதல்களுமே ஆளுந்தரப்பு மீதான வலுவான பொதுமக்களின் அதிருப்தியையும், வெறுப்பையும் மறக்கடிக்கும் என்பதும், மக்கள் அவசரமாகத் தம் மனசுகளை மாற்றிக்கொண்டு தமக்கு வாக்களிக்க வருவார்கள் என்பதும்தான் ஆளுந்தரப்பு போட்டு வைத்திருக்கும் முதற் கணக்கின் மூலோபாயம்.
அதேநேரம்,தேர்தல் காலங்களில் மட்டுமே ஊருக்குள் செப்பனிடப்படும் வீதிகளுக்காகவும், வழங்கப்படும் கூரைத் தகடுகள் மற்றும் மட்டமான மூக்குக் கண்ணாடிகளுக்காகவும், விரல் நொடிக்கும் பொழுதில் மனசுகளை மாற்றிக் கொண்டு வந்து கடந்த காலங்களில் வாக்களிக்கப் பழகியிருந்த மக்கள், இப்போது நிஜம் எது நிழல் எதுவென்று பிரித்துப் பார்க்கும் தெளிவையும், அறிவையும் பெற்றிருப்பதில் ஆளுந்தரப்பின் இம்முதற் கணக்கு இம்முறை தப்புக் கணக்காகும் வாய்ப்பும் அதிகமாகவே தென்படுகிறது.
இலங்கை மின்சார சபை பொருளாதார நெருக்குதல்களுக்கு உள்ளாகியிருந்த நிலையிலும்,அண்மைய ஊவா தேர்தலின்போது ஜனாதிபதி மின்சாரக் கட்டணத்தை தன்னிச்சையாகக் குறைத்தபோதுகூட மக்கள் ஆளுந்தரப்பைப் புறக்கணித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மட்டுமன்றி, துறைமுகம், விமான நிலையம், அதிவேக பாதைகள் என தெற்கில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அங்கு வாழ் வாக்காளர்களின் மனசுகளை மாற்றிவிட்டதாகவும் இல்லை. கடந்த தென் மாகாணசபைத் தேர்தலில் ஜணாதிபதியின் தொகுதியிலேயே எதிர்க்கட்சிக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குகளின் தொகை மிதமாக அதிகரித்திருந்தமையும் இதற்கு நல்லதோர் உதாரணம்.
தவிர, தேர்தல்கால குண்டுகளின் தற்காலிக ஆயுளின் போக்கை எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும்தான் தெளிவுபடுத்த வேண்டும் என்கிற நிலைதாண்டி, ஒருபடி மேலேயே மக்கள் அடிப்படை யதார்த்தம் புரியப் பழகியிருக்கிறார்கள்.
ஜனநாயக ரீதியான போராட்டத்தில், தனிக் குடும்பமொன்றின் எதேச்சதிகார ஆதிக்கத்துக்கு எதிரான உச்சகட்ட வெறுப்பிற்கு முன்பு பொருளாதாரமும் அபிவிருத்தியும் இரண்டாம் பட்சமென்பதை பொதுமக்கள் அண்மைய தேர்தல்களில் உணர்த்தியும்தான் இருக்கிறார்கள்.
தம்மை இரைகொள்ளும் இயந்திரத்தின் உறுப்புக்களை அச்சமின்றி, அகிம்சை வழியில் முடக்க முற்பட்டிருக்கும் மக்கள், (வெறும் சில்லறைகளுக்கு விலை போகாமல் அதேநேரம் கொடுப்பதை வாங்கிக் கொண்டு) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஒரு கருவியாகப் பயன்படுத்துவார்கள் என்றே எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு தமிழர் உட்பட்ட முஸ்லிம்களின் வாக்குகளில் இம்முறை சந்தேகம் கொண்டிருக்கும் ஆளுந்தரப்பு, விரைவான, மலிவான பிரசாரங்கள் ஊடாக பெரும்பான்மை பெளத்தர்களின் வாக்குகளை அதிகமதிகம் சுவீகரிக்க முனைந்திருப்பதுதான் அதன் இரண்டாவது கணக்காகிறது.
சிறுபான்மைக்கு எதிரான மனோபாவத்தை பெளத்தர்களிடத்தில் வளர்த்துவிட்டால் இலகுவில் என்றில்லாவிட்டாலும் சிரத்தையுடனாவது தம் இலக்கை அடையலாம் என்பது மேற்படி இரண்டாம் கணக்கின் அடிமூலமாகும்.
இச்செயற்பாட்டை வெகு நேர்த்தியாகவும், லாவகமாகவும் மேற்கொண்டால், 80 இலட்சம் பெளத்த வாக்காளர்களிடமிருந்து தமக்கான வெற்றித் தொகையை எட்டலாம் என்கிற அளவில் ஆளுந்தரப்பு இம்முறை இனரீதியான இத்துருப்புச் சீட்டைப் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகமாகத் தென்படுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையிலான குழப்பத்தில் இம்மனோபாவம் தாக்கம் செலுத்த விளைந்தாலும், ‘குடும்ப ஆதிக்கத்துக்கு‘ எதிரான தற்போதைய நாட்டின் பொது மனோபாவத்தை இது எந்தளவுக்கு ஊடறுக்கும் என்பதும், அது எத்தனை தூரம் சாத்தியப்படும் என்பதும் சொல்வதற்கில்லை.
இந்நிலையில், தம்மீது அதிருப்தியுற்றிருக்கும் பங்காளிக் கட்சிகள் வெளியேறுவதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்திருக்கும் ஆளுந்தரப்பு, எப்படியாவது அவர்களைத் தக்க வைத்துக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் பயணப்படும் காரியங்களையும் முன்னெடுத்திருக்கிறது.
அரசை விட்டு வெளியேறத் துணிந்த ஜாதிக ஹெல உறுமய முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கொள்ள ஆளுங்கட்சி சார்பில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களிடையே கடந்த தின்களன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன்போது ஹெல உறுமயவின் யோசனைகள் தொடர்பில் ஆளுங்கட்சி சார்பில் சாதகமான பிரதிபலிப்பு வெளிப்படுத்தப்பட்டதாகவும், பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் பலமான கூட்டணி ஒன்று அமைவதைத் தடுக்கும் நோக்கில், ஜனாதிபதியின் தேவைக்கு அமைவாகவே ஹெல உறுமய விலகுகிறாற்போல் பாசாங்கு காட்டி இந்த நாடகத்தை முன்னெடுத்ததாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும் ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்குத் தாவும் எண்ணத்தில் இருக்கும் முக்கியஸ்தர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் ஹெல உறுமயவின் நாடகம் ஆளுங்கட்சிக்குப் பயன்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் எதிர்வரும் வாரங்களில் ஆளுங்கட்சி மற்றும் ஹெல உறுமயவிற்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றின் மூலம், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பு திருத்தச் சட்டம் ஊடாக ஜனநாயகம் பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஹெல உறுமய கைவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதனை தேர்தலுக்கு பின்னர் நிறைவேற்றித் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்ற வாதத்தை முன்வைத்து ஜனாதிபதிக்கு ஆதரவாக ஹெல உறுமய பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
அப்படி, ஜாதிக ஹெல உறுமயும் தொடர்ந்து அரசுக்கு தோள் கொடுக்குமாயின் இம்முறை இனவாத மற்றும் தேசியவாதப் பிரசாரம் களைகட்டவும் வாய்ப்புள்ளது.
“ இலங்கையின் அரசியலையும், அதிகார பீடத்தையும் தீர்மானிக்கும் சக்தியை சிறுபான்மையினரிடத்தில் இருந்து பிடுங்கியெறிய வேண்டும்” என ஹெல உறுமயவின் உதய கம்மன்பில தெரிவித்திருந்தமையின் ஆழ அர்த்தம் இதை மென்மேலும் வலுவூட்டுகிறது.
மட்டுமன்றி, வழக்கம்போல் முரட்டு வற்புறுத்தல்கள், எதிரணியையும் மக்களையும் இனத்துவேசத்தை அடியொட்டி மோத விடும் சூழ்ச்சித் திட்டங்கள் இம்முறை அதிகம் அரங்கேறும் வாய்ப்பும் தெரிகிறது.
பெரும்பான்மையை இன ரீதியான கொள்கையுடன் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறு கட்சிகளுக்கு மஹிந்தவை விட்டால் வேறு போக்கிடம் இல்லையென்பதும், ஐ.தே.கவும் அக்கட்சிகளை ஒன்றும் வாரியணைக்கப் போவதில்லை என்பதும் நிதர்சனம்.
ஆளும் கட்சியின் பங்காளிகளான, கட்சிக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வைத்திருக்கும் சிறு இடதுசாரிக் கட்சிகளோ இல்லை ரிசாத் பதியுத்தீன், அதாவுல்லாக்களின் மினி காங்கிரஸ்களோகூட ஐ.தே.கவின் இப்போதைய தேவையாக இருக்காது.
இவர்களது வாக்கு வங்கிகள் பலஹீனமாகவே இருக்கும் நிலையில், மஹிந்தவைப் போன்று ரணில் இவர்களுக்கு அத்தனை சுகபோகங்கள் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்க முடியாது.
மஹிந்தவுடன் தங்கியிருக்கும் காலம் மட்டுமே மேற்படி தனி நபர் கட்சிகளின் அரசியல் ஆரோக்கியம் மிகுந்ததாக இருக்கும் என்பதை அவர்களே அறிந்தும் வைத்திருக்கும் நிலையில், மஹிந்தவை விட்டு அவர்கள் நழுவிச் செல்வார்கள் என்றும்கூட எதிர்பார்க்க முடியாது,
மட்டுமன்றி, அளுத்கமை இன வன்முறைக்குப் பிறகு முஸ்லிம்களின் முழுமொத்த ஆதரவும் தம் பக்கம் இருப்பதை ஐ.தே.க.அறிந்து வைத்திருப்பதும், வெறும் தரகர்கள் மூலமாக அதனைப் பெற வேண்டிய தேவை இல்லையென்பதும் ஐ.தே.கவுக்குத் தெரியும்.
சாட்சாத் ஐ.தே.க.,வுக்கு ஜனாதிபதித் தேர்தலில் 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்திரமான வாக்குகள் உண்டு என்கிறபோது, அடுத்த 15 இலட்சம் வாக்குகளுக்காகவே ஆளுந்தரப்பில் இருந்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும், இலங்கை தொழிலாளர் காங்கிரசையும் அது தன்பக்கம் இழுக்கப் பிரயத்தனப்படுகிறது.
மக்கள் விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, சரத் பொன்சேக்காவின் ஜனநாயகக் கட்சி என்பன ஜென்மத்துக்கும் மஹிந்தவை ஆதரிக்கப் போவதில்லை என்பது ஐ.தே.கவுக்கு ஆறுதல்தான்.
இந்நிலையில்,அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனதிராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கில் 80 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக ரீதியான ஆட்சியொன்று இருக்கின்ற நிலையில், அதனைத் தாண்டிய இராணுவ மற்றும் ஆளுநர் ஆட்சி என்பன தொடர்ந்து கொண்டிருப்பதாகவும்,.வடக்கிலும் கிழக்கிலும் இன்று இராணுவ மயப்படுத்தப்பட்ட அரசியலும் அரசியல் மயப்படுத்தப்பட்ட இராணுவமும் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர்,
தமது இன, மத, சமூக அடையாங்களை நிலைநிறுத்தி எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக தாம் போராடாது இருக்கவும் முடியாது. எனவும் தெரிவித்திருக்கிறார்.
எவை எப்படியோ, அளுத்கமையில் பொதுபலசேனா தாண்டவமாடி முடியும்வரைக்கும் வேடிக்கை பார்த்த அதிகாரத் தரப்பின் மீதான நம்பிக்கையை இழந்திருக்கும் முஸ்லிம்களின் மனோநிலை இன்று இவ்வாறுதான் இருக்கிறது.
ஊவா தேர்தலில் ஹக்கீமும், ரிசாத் பதியுத்தீனும் சேர்ந்து களமிறங்கியும் முழுமொத்த 35000 முஸ்லிம் வாக்குகளில் வெறும் 5000 வாக்குகளைக்கூட அவர்களால் பெற முடியவில்லை என்பதிலேயே ஆளுந்தரப்பு மீதான முஸ்லிம்களின் வெறுப்பு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.
ஆக, ஹக்கீமுக்காகவோ, ரிசாதுக்காகவோ, அதாவுல்லாவுக்காகவோ, ஹிஸ்புல்லாவுக்காகவோ ஆளுந்தரப்புக்கு வாக்களித்து பொதுபல சேனாக்களை மேலும் உயிரூட்டுவதற்கும் முஸ்லிம்கள் தயாராக இல்லை.
முஸ்லிம்களின் இந்த மனோபாவம் இம்முறை ஐ.தே.கவுக்கு சாதகமாகவே அமையவும்கூடும்.
இந்நிலையில், முஸ்லிம்களின் வாக்குகளை மட்டுமே நம்பி, அதில் தங்கி வாழும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளுந்தரப்பில் தொடர்ந்துமிருந்து, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை ஆதரிக்குமானால், காலம் காலமாக மர்ஹூம் அஷ்ரபுக்காக ஒரு நன்றியுணர்ச்சியின் அடிப்படையில் அக்கட்சிக்கு வாகளிக்கப் பழகியிருக்கும் கிழக்கு வாழ் முஸ்லிம்களின் வாக்குகளில் சரிபாதிக்கும் மேல் இம்முறை ஐ.தே.கவைச் சென்றடையும் நிலைமையும் ஏற்படலாம்..
ஆளுந்தரப்பில் இருந்துகொண்டு ஹக்கீம் இம்முறை தன்னை நிரூப்பதென்பது அவ்வளவு சுலபமான காரியமாகவும் தோன்றவில்லை. மட்டுமன்றி, இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் புனித ஹஜ்ஜுக்குச் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கப் போவதான ஜனாதிபதியின் வாக்குறுதியை முன்னிறுத்தி மட்டும் ஹக்கீமால் இம்முறை வாக்குக் கேட்கவும் முடியாது.
ஆளுந்தரப்பில் ஹக்கீம்…எதிரணியில் முஸ்லிம்கள் என்கிற இன்றைய சூனியமான சூழ்நிலையில்,
முஸ்லிம்களுக்காக முஸ்லிம் காங்கிரஸா? இல்லை முஸ்லிம் காங்கிரஸுக்காக முஸ்லிம்களா என்கிற யதார்த்தமும், அதை நிரூபிக்கக்கூடிய வல்லமையும் இம்முறை ஹக்கீமிலும், கிழக்கு வாழ் முஸ்லிம்களிலும் ஒருசேரத் தங்கியிருப்பதும் வேடிக்கைதான்.
முஸ்லிம்களா? முஸ்லிம் காங்கிரஸா….இம்முறை யாரை யார் வெல்லுவார்கள்? யார் எவரை நிராகரிக்கப் போகிறார்கள் என்பதுதான் இந்த அரசியல் சதுரங்க விளையாட்டின் விறுவிறுப்பாகவும் அமையப்போகிறது. (நிறைவு)
Nawamani Weekly

No comments:
Post a Comment