Monday, September 20, 2021
மனசுகளில் ஜொலிக்கும் மைத்திரியும்... மதில்களில் ஜொலிக்கும் மஹிந்தவும்
மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்
riskyshareef@gmail.com
“ மணக்க மணக்க -
ஜொலிக்கத்தான் செய்கிறார்கள்….
மனசுகளில் மைத்திரியும்:
மதில் சுவர்களில் மஹிந்தவும். “
- இற்றைக்கு இரு வாரங்களுக்கு முன்பு, எனது முகநூலில் நான் எழுதிய சிறு கவிதை இது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட இரு வார காலத்துக்குப் பிறகும் களநிலவரத்தின் யதார்த்தத் தன்மை, இப்படியொரு மினிக் கவிதையில் அடங்கக்கூடிய அளவில்தான் இருந்தது
இன்றும், இக்கட்டுரையை எழுதும் தறுவாயிலும் அதிக மனசுகளில் மைத்திரியே ஜொலித்துக் கொண்டிருக்க, மஹிந்தவோ மனசுகளை விட்டு மட்டுமன்றி, மதில் சுவர்களில் இருந்தும்கூட காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்.
( தேர்தல் ஆணையாளரின் வற்புறுத்தலுக்கு அமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்அவுட்கள், போஷ்டர்கள் பெருமளவில் அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றன.)
மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டுவதுபோல, மக்கள் பணத்தை பெருமளவில் வீண் விரயம் செய்து, இம்முறை ஆளுந்தரப்பு மஹிந்தவுக்காக அதிக கட்அவுட்கள் மற்றும் போஷ்டர் விளம்பரங்களை மேற்கொண்டதும் அவர் மக்கள் மனசுகளில் இருந்து நழுவியதற்கானதோர் உதிரிக் காரணம் என்றும் சொல்லலாம்.
200 கோடி ரூபாவையும் மிகைத்ததோர் தொகை இதற்கென செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. (ஜனாதிபதியின் ஒரு கட்அவுட்டுக்கு 05 இலட்சம் ரூபாவில் இருந்து 20 இலட்சம் ரூபாவரை செலவிடப்பட்டுள்ளதாக, பிரபல ஊடகவியலாளர் ரீ.பீ.எஸ். ஜெயராஜ் தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.)
மட்டுமன்றி, ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 69வது பிறந்தநாளான கடந்த நவம்பர் 18ஆம் திகதியன்று, ஊடகங்களில் மஹிந்தவுக்காக அரச திணைக்களங்கள் வெளியிட்ட விளம்பரங்களுக்கான செலவுகள் மட்டும் 26 கோடி ரூபாவை மிகைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பிறந்த நாளையொட்டி கொழும்பில் அவருக்கு 4000 கட் அவுட்கள் வைப்பதற்கான கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் 200 கட்அவுட்களுக்கு மாத்திரமே தாம் அனுமதி வழங்கியதாகவும் கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இவற்றுக்காக, ஶ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் தேசிய லொத்தர் சபை என்பன கணிசமான அளவில் மக்கள் பணத்தைச் செலவளித்திருப்பதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், எவரும் தனக்காக கட்அவுட்கள் வைக்கவோ.போஷ்டர் விளம்பரங்களைச் செய்யவோ வேண்டாம். அதற்கான பணத்தை சிறுநீரக நோயாளர்களுக்கான நிதியத்தில் சேர்த்துவிடுங்கள் என பொது வேட்பாளர் மைத்திரி ஆரம்பத்திலேயே வலியுறுத்தியமை, மஹிந்தவின் விளம்பர மோகத்தில் மயங்கியிருந்த பொதுமக்கள் பலரை மைத்திரியின் பக்கம் கொஞ்சம் பெருமிதத்தோடு திரும்பிப் பார்க்கவும் செய்திருக்கிறது.
மக்களின் பணம் வீண்விரயம் செய்யப்படுகிறது என்கிற உண்மை நெற்றிப் பொட்டில் உறைக்க, இத்தேர்தலில் கணவான் அரசியல் குறித்தும், அதன் தேவைப்பாடு கருதியும் பொதுமக்கள் கொஞ்சம் தெளிவை உணர்ந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.
சர்வாதிகாரப் போக்கிலான குடும்ப ஆட்சி, ஊழல் மோசடி, அபிவிருத்தித் திட்டங்கள் என்கிற போர்வையில் அதிகாரத் தரப்பினர் கையகப்படுத்திய பல்லாயிரம் கோடிகளை மிகைக்கும் தரகுப் பணமும், விடுதலைப் புலிகளிடமிருந்து பெற்ற, (அரசின் கணக்கில் வராத) பெருந்தொகைப் பணம் உட்பட்ட தங்க ஆபரணங்கள், அதிகாரத் தரப்புக் குடும்பங்களின் டாம்பீகமும், சுகபோகமும் கலந்த உல்லாச வாழ்க்கை, ஜனாதிபதியின் புதல்வர்களின் லம்போகினி கார்கள் மற்றும் கேளிக்கை விநோதங்கள், பொது மக்கள் மீதான வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும் நெருக்குவாரங்களும், வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவராலயங்கள் உட்பட்ட நிர்வாக சேவை அரசியல் மயமாக்கப்பட்டமை மட்டுமன்றி….
அரசியலமைப்பின் 17-வது சட்டத்திருத்தத்தை மாற்றியதன் மூலம், உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், நீதிச்சேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு, கணக்காய்வாளர், நாயகம் போன்ற உயர் பதவிகளுக்கு தாம் விரும்பியவர்களை நியமிக்கும் சர்வாதிகாரத்தை பெற்றிருந்த ஜனாதிபதி அவற்றைத் துஷ்பிரயோகம் செய்தமை,…
நாட்டுக்கு மிகப்பெரிய கேட்டையும் ஆபத்தையும் விளைவிக்கும். இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஊடகங்களுக்கும், சிவில் அமைப்புகளுக்கும், தகவல் பரிமாறும் சுதந்திரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியமை, இனவாதத்துக்கு மேலும் உயிரூட்டியமை..…
இப்படிப் பல பிரதான காரணங்கள் இம்முறை ஜனாதிபதியின் ஆதரவை மழுங்கடித்திருந்தாலும், ஜனாதிபதியின் மேற்படி விளம்பர மோகத்தை பொதுமக்களால் இம்முறை ஜீரணிக்க முடியாமல்தான் போயிருக்கிறது.
இந்நிலையில், சிங்கள சமூகத்திடம் இழந்து வரும் தனது செல்வாக்கைச் சரிசெய்து, தனது பிரசாரக் கூட்டங்களுக்கு மக்களைத் திரட்டுவதற்கென ஜனாதிபதியால் வரவழைக்கப்பட்ட சல்மான்கான் மற்றும் ஜெக்குலின்களின் கவர்ச்சிக்கு முன் மண்டியிடுவதற்கும் பொதுமக்கள் இம்முறை தயாராக இல்லாது இருந்ததிலும் ஆளுந்தரப்பு தோல்வியைக் கண்டிருக்கிறது.
அண்மையில்,பெருத்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையின் 11 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினருக்கான நிவாரண நிதியாக வெறும் 35 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கிய அரசாங்கம், சல்மான்கானுக்கும் ஜாக்குலினுக்கும் 70 மில்லியன்களுக்கும் மேலாக செலவிட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும்கூட பொதுமக்கள் இம்முறை ஆளுந்தரப்பு மீது அதிருப்தியை உணர வழிசெய்திருக்கிறது.
ஜனநாயகத்துக்கும் தேர்தலுக்கும் என்ன தொடர்பிருக்கப் போகிறது என்பதை நியாயப்படுத்தும், மஹிந்தவுக்கு மட்டுமே பக்கச் சார்பான அரச மற்றும் தேசிய ஊடகங்கள், மீண்டும் மீண்டும் யுத்த வெற்றியைத்தான் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தாலும் அவை ( கிராமப்புற பெரும்பான்மை சிங்களவர்களைத் தவிர) நகர்ப்புற மற்றும் படித்த சமூகத்தினரிடையே இம்முறை அதிகம் செல்வாக்குச் செலுத்தவும் தவறியிருக்கிறது.
இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ரணில் விக்கிரமசிங்கவின், 'ஐக்கிய தேசிய கட்சி’உட்பட்ட 49 கட்சிகள் மற்றும் சிவில்சேவை அமைப்புக்களின் ஆதரவோடு களத்தில் இறங்கியிருக்கும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, இம்முறை நீதியும், சுதந்திரமுமான தேர்தலொன்று நடைபெறும் பட்சத்தில் வெற்றியீட்டும் வாய்ப்புள்ளதாகவே கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசியல் வரலாற்றிலேயே, ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியிலிருந்து 27 உறுப்பினர்கள் விலகி எதிர்க் கட்சிக்கு தாவியதும் இதுதான் முதல் சந்தர்ப்பமாகும்..( இக்கட்டுரையை எழுதும் தறுவாயில் இன்னும் ஐவர் எதிரணி தாவும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிய வருகிறது.).
தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஆளும் மற்றும் எதிரணிகளில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை உடைத்து, அக்கட்சிகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதில் கைதேர்ந்திருந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
இன்று, கை சேதத்துக்குள்ளாகி, நிர்க்கதி நிலைக்கு அவரை இட்டு வந்திருப்பதும் மேற்படி கட்சிகளின் பிளவும், பிரிவும்தான் என்பதும் இத்தேர்தல் நமக்குக் கற்றுத் தந்திருக்குமோர் சிறந்த பாடமாகும்.
இந்நிலையில், நாளுக்கு நாள் மைத்திரிபால சிறீசேனவின் ஆதரவு வட்டம் விரிந்துகொண்டே சென்று, மஹிந்தவின் கோட்டையும் சரிய ஆரம்பித்து….. தேர்தலுக்கு இன்னும் இரு நாட்களே இருக்கும் தறுவாயில், வன்முறைகள், அடாவடித்தனங்களுக்கு மத்தியிலும் பிரசாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டி ஓய்ந்திருக்கின்றன.
அப்பாடா….இனி, யார் எவரை வெல்லப் போகிறார் என்பதுதான் இத்தேர்தலில் எஞ்சியிருக்கும் சுவாரசியமான சங்கதி..
முன்னமே சொன்னதுபோல, நீதியான தேர்தலொன்று நடைபெறும் பட்சத்தில் மைத்திரிதான் வெல்வார் என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருக்க, இத்தேர்தலில் மஹிந்த தோற்கும் வாய்ப்பு அதிகம் தென்படுகின்றபோதும், மஹிந்த எப்படியும் (?) வெல்வார் என்று இன்னொரு சாரார் சொல்வதையும் சும்மா கிடப்பில் போட்டுவிட முடியாது.
அந்த “எப்படியும்” என்கிற ஒரே தனிச்சொல்லில் பல ஆழ அர்த்தங்கள் உண்டு என்பதை நமக்கு முன்னைய தேர்தல்கள் வெகுவாகக் கற்றுத் தந்திருக்கின்றன. நிழலான கைங்கரியங்களும், தந்திரங்களும் அச்சொல்லில் மறைந்திருக்கும் வாய்ப்பு இம்முறையும் நிறையவே உண்டு என்பதை வெறுமனே மறுதலித்துவிடவும் முடியாது.
2010 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை எதிர்த்துக் களமிறங்கிய சரத் பொன்சேக்காவுக்கு, தற்போது மைத்திரிக்கு இருக்கும் வரவேற்பை ஒத்ததோர் மக்கள் ஆதரவு அப்போது இருந்த நிலையிலும், அவரால் வெறுமனே 40.15% வாக்குகளையே (4173,185 வாக்குகள்) பெற முடிந்திருக்கிறது. அத்தேர்தலில் 57.88% வாக்குகளைப் பெற்று (6015, 934 வாக்குகள்) மஹிந்த வெற்றி பெற்றமை என்பதும் அப்போது பலரையும் உறையச் செய்த அதிர்ச்சியான செய்திதான்..
இம்முறையும் அப்படியேதும் நடக்குமா? என்றால்….வாய்ப்புக்கள் குறைவென்றுதான் எதிரணி சொல்கிறது. ஆயினும், அது வாய்ப்புக்கள் இல்லை என்கிற அர்த்தத்தைத் தந்துவிடாத கட்டத்தில் மஹிந்த உட்பட்ட அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆளுந்தரப்பின் மவுனம் ஒரு பீதியை ஏற்படுத்தவும் செய்திருக்கிறது.
இந்நிலையில், கிராமப்புற சிங்களவர்களின் வாக்குகளைக் கொண்டு கடந்த தேர்தல்களில் வெற்றியீட்டி வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இம்முறை பாரிய சவால் காத்திருப்பதாக த ஹிந்து தெரிவித்துள்ளது. உண்மைதான்.
ஆயினும், யுத்த வெற்றிக்குப் பிறகு மஹிந்தவை “தெய்வமாக”ப் பார்த்து வரும் கிராமத்தவர்களின் மனநிலை இன்றைக்கும் மாறாமல் பார்த்துக்கொள்ளும் பணிகளை, அரச ஊடகங்கள் பொய்களைப் புனைவதன் மூலம் இத்தேர்தலிலும் செய்துதான் வந்திருக்கின்றன..வருகின்றன.
மட்டுமன்றி, விடுதலைப் புலிகளின் தலைவரை சந்திரிகா அம்மையார், “ மிஸ்டர் பிரபாகரன்….” என்று விளித்தமை, ரவூப் ஹக்கீமின் தனி நிர்வாக மாவட்டக் கோரிக்கை, தமிழர் கூட்டமைப்பு நாட்டைத் துண்டாடி விடும், மீளவும் புலிகள் உயிர்த்தெழுவார்கள் என்கிற (தேவையற்ற) அச்சங்கள் கிராமத்தவர்களிடத்தில் அதிகம் விதைக்கப்பட்டு வருவதில், மஹிந்தவின் மதிப்பு அங்கு வெகுவாகக் குறையும் என்றும் எதிர்பார்க்க முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியே ஆரம்பத்தில் கிராமப்புற மக்கள் மத்தியில் மதிப்பை கொண்டிருந்தது. எனினும் 1977ஆம் ஆண்டு,அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அறிமுகப்படுத்திய திறந்தபொருளாதாரக் கொள்கைக்கு பின்னர் கிராமப்புற செல்வாக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கைக்கு மாறியது.
இந்நிலையில், 2005ஆம் ஆண்டு முதல் மஹிந்த ராஜபக்ஷவின் வாக்கு வங்கிகளாக கிராமப் புறங்களே விளங்கி வருகின்றன.
எனினும், இம்முறை பொது வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக்.கட்சியின் ஒருவரான மைத்திரிபால சிறிசேனவே களமிறங்கியுள்ளமையால் குறித்த கிராமப்புற வாக்கு வங்கியில் பிளவு ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.
குறிப்பாக பொலநறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய இடங்களில் உள்ள விவசாய மக்களின் வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. எனவே இந்த ஜனாதிபதி தேர்தல் வாழ்வா? சாவா? என்ற நிலையில் இடம் பெறுவதாக த ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.
பலஹீனமான வாக்கு வங்கிகளைக் கொண்ட விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் வயது மூப்பில் தொய்ந்துபோன தலைமைகளைக் கொண்ட சில இடதுசாரிக் கட்சிகள் (அவைகளும் இரண்டாகப் பிளவுபட்ட நிலையில்) மற்றும் ஆறுமுகம் தொண்டமானின் இ.தொ.கா. மட்டுமே ஆதரிக்கும் மஹிந்தவை விடவும், ஐ.தே.க, ஶ்ரீல.சு.கவின் சந்திரிகா அணி, ஜாதிக ஹெல உறுமய, ஶ்ரீல.முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் தேசியக் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் பல சிறு கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவு கிடைக்கப் பெற்றிருக்கும் மைத்திரியின் வெற்றி இத்தேர்தலில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதுதான்.
மஹிந்தவோ இல்லை மைத்திரியோ மேடைகளில் சொல்லிக் கொள்ளும் அளவில், இத்தேர்தலில் அவர்களில் எவருமே 20 இலட்சம் மேலதிக வாக்குகளைப் பெற்று வெல்லக்கூடிய சாத்தியங்களும் இல்லை.
ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்புக்களின் பிரகாரம், இம்முறை மஹிந்தவை விடவும் மைத்திரி 05 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றியீட்டும் வாய்ப்புள்ளது. அதாவது, மைத்திரி 52% வாக்குகளையும் ( 59 அல்லது 60 இலட்சம் வாக்குகள் ), மஹிந்த 47% வாக்குகளையும் ( 54 அல்லது 55 இலட்சம் வாக்குகள்) அடுத்த டம்மி வேட்பாளர்கள் 01 வீத வாக்குகளையும் பெறுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எதிர்பார்ப்பு, இன்னமும் நம் நாட்டில் ஜனநாயகம் முற்றாக செத்துவிடவில்லை என்கிற அதீத நம்பிக்கையில், நீதியும் சுதந்திரமுமான தேர்தலை அடியொட்டியே விளைந்தது என்பதையும் ஒரு தடவைக்கு இரு தடவைகள் இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
மற்றப்படி,வெற்றியைத் தீர்மானிக்கும் இந்த 05 இலட்சம் வாக்குகள் என்பது இலகுவான மோசடிக்கு இலக்காகக் கூடிய எண்ணிக்கை என்பதையும் மிக்க மன வருத்தத்தோடு குறிப்பிடுகிறேன்.
இன்றைய இலங்கை வாழ் சரிபாதி எண்ணிக்கையிலான பெரும்பான்மையினர் மற்றும் ஒட்டுமொத்த சிறுபான்மையினரின் விருப்பத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏற்ப, இம்முறை ஆட்சி மாறுமா?
ஜனநாயகம் மீது வலுப்பெற்று வரும் சந்தேகத்தில், சகலருமே பெறுபேற்றுக்காகக் காத்திருக்கத்தான் வேண்டியிருக்கிறது. ( நிறைவு )
நவமணி வாரயிதழ்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment