Monday, September 20, 2021

யாரோ ஏவிய அம்பா ஞானசார தேரர்?


உயர்மட்ட ஆசீர்வாதம் இல்லாது இருந்திருக்குமேயானால் இல்லை ஒரு தற்செயலான இனமுறுகல் என்றிருந்தால் அளுத்கம இத்தனை பேரழிவைச் சந்தித்திருக்கவும் வாய்ப்பில்லை!

- மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்

யார் என்ன சொன்னாலும், தேரவாத பெளத்தத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட சதிதான் அளுத்கம இனவன்முறை என்றால் அது மிகையில்லை.

1983  கறுப்பு ஜூலைக்குப் பிறகு, இலங்கை வாழ் சிறுபான்மை சமூகத்தவரைக் குறிவைத்துக் கட்டவிழ்த்துவிடப்பட்ட மிகமோசமான, மிலேச்சத்தனமான, அதேநேரம், திட்டமிட்டு ஈடேற்றப்பட்ட இனவன்முறைதான் அண்மைய “அளுத்கம கலவரம்”.

1994  சந்திரிகா பண்டாரநாயக்கா ஆட்சிக்காலத்தில், சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கங்கொடவில சோமதேரர் உசுப்பேற்றியதற்கு ஒத்ததுதான் அண்மைய இந்த தேரவாத இனவாதம்,

அன்றைய சந்திரிகா ஆட்சியிலேயோ இல்லை அதன் பிறகான குறுகியகால ரணில் விக்கிரமசிங்க ஆட்சியிலேயோ முழுதுமாக வேரறுக்கப்படாததன் விளைவு, அது பல மடங்கில் தீவிரம்பெற்று….மஹிந்த ஆட்சிக்காலத்தில் அதன் வாள்முனைகள் கூர் தீட்டப்பட்டிருக்கின்றன என்பது பலர் அறியாத உண்மை.

அப்போதைய மு.கா.தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களையும், முஸ்லிம்களையும் ஒருசேரக் குறிவைத்திருந்த சோமதேரரின் தேரவாத பெளத்த இனவாதம், அப்போதைய கிறிஸ்தவ தேவாலயங்களையும் அதிகம் நொறுக்கித் துவம்சம் செய்திருந்தன.

இன்றும் அதே வீச்சை மிகைத்துத் தாண்டவமாடும், அதே தேரவாத பெளத்தத் தீவிரவாதம் தன் தலைமையை மட்டுமே மாற்றிக் கொண்டிருக்கிறது.

அன்று,சோமதேரர் இருந்தயிடத்தில் இன்று ஞானசாரதேரர் அரியாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறார் என்பது மட்டுமே வித்தியாசம். மற்றப்படி நெறியாழ்கையும் செயன்முறையும் ஒன்றுதான்.

சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான மனோபாவத்தை பெரும்பான்மை சிங்களவரிடத்தில் விதைப்பதும், வளர்ப்பதும்தான் இருவரினதும் நோக்கம்.

முன்னையவர் சோம தேரரைவிடவும் பின்னையவர் ஞானசாரதேரர், அரச ஆதரவோடு நேரடியாகவே சட்டத்தைத் தன் கையில் எடுத்து, முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும்,  ஜீவனாம்சத்தையும் களையெடுக்க முனைந்திருப்பதும், முஸ்லிம்களின் வம்ச விருத்தியழிப்பை பகிரங்கமாகவே மேற்கொண்டு வருவதும்தான் ஆபத்தான அம்சம்.

முன்னைய சோமதேரருக்கு சில சிறுசிறு இனவாதக் கட்சிகளின் மறைமுக ஆதரவு இருந்து வந்த நிலையில், அக்கால ஆட்சியில் இருந்த சந்திரிகா அம்மையாரின் அல்லது அவரது அமைச்சர்களின் பகிரங்க ஆதரவு அவருக்கு இருந்ததென்று குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை.

ஆனால், தற்போது நிலைமை அவ்வாறில்லை. சகலமும் தலை கீழாகத்தான் அமைந்திருக்கின்றமை துர்ப்பக்கியம்.

மஹிந்த ஆட்சியின் முக்கிய பதவிகளில் இருக்கும் பாதுகாப்புச் செயலர் கோதபாய ராஜபக்‌ஷ, அமைச்சர்கள் விமல் வீரவன்ச,சம்பிக ரணவக்க மற்றும் சில இனவாதக் கட்சிகளின் ஆசீர்வாதம் பொதுபலசேனாவுக்கும், அதன் பொதுச் செயலாளர் கங்கொடத்தே ஞானசார தேரருக்கும் கிடைத்து வருவதென்பது யார் மறுத்தாலும், அவர்களாகவே மறுத்தாலும் அது பலரும் அறிந்த உண்மை.

இல்லாவிட்டால், ஒரு ஜனநாயக நாட்டில் இத்தனை தலைக்கனத்தோடும், திமிரோடும் சுதந்திரமாக, சட்டத்தைத் தம் கையிலெடுத்து…பொலிஸும் இராணுவமும் புடைசூழ அளுத்கமவில் ஒரு இனச்சுத்திகரிப்பு வெறியாட்டத்தை ஞானசாரர் என்கிற தனிமனிதனாலேயோ, இல்லை பலசேனா என்கிற ஒரு சிறு அமைப்பாலேயோ மேற்கொண்டிருக்கமுடியும் என்று கருதமுடியாது.

உயர்மட்ட ஆசீர்வாதம் இல்லாது இருந்திருக்குமேயானால் இல்லை ஒரு தற்செயலான இனமுறுகல் என்றிருந்தால் அளுத்கம இத்தனை பேரழிவைச் சந்தித்திருக்கவும் வாய்ப்பில்லை.

விதியை நொந்தாலும்கூட அளுத்கம வன்முறை, சதிவரைந்த சித்திரம் என்பதுதான் யதார்த்தம்.

ஏற்கனவே, யுத்தக்குற்றவாளியாக ஐ.நா.மனித உரிமை ஆணக்குழு விசாரணைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருந்த மஹிந்த அரசை, அளுத்கம விவகாரத்தின் உக்கிரம் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட்ட சர்வதேச சமூகத்தை மீண்டும் ஒருமுறை கடுஞ்சினத்தோடு திரும்பிப் பார்க்க வைத்திருந்தன.

அளுத்கம வன்முறைக்கு அடிப்படை..…அரசு எத்தனை சோடித்து உடுப்பாட்டி மறைத்தாலும், ஞானசாரரின் இனவாதத்தைத் தூண்டிய நாகரிகமற்ற பேச்சுத்தான் என்பதில் ஐ.நா.மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை உடன்பட்டிருந்தார். அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளும் இதை வழிமொழிந்திருந்தன.

கடந்த ஐந்து வருடங்களுக்குள் இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக 300 வன்முறைச் சம்பவங்களும் (அளுத்கம விவகாரத்துக்குப் புறம்பாக),கிறிஸ்தவர்களுக்கு எதிராக 200 வன்முறைச் சம்பவங்களும் ஐ.நாவில் பதியப்பட்டிருப்பதை நவீபிள்ளை உரத்ததொனியில் ஞாபகப்படுத்தவும் நேரிட்டது.

மட்டுமன்றி, அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருக்கும் கோதபாய ராஜபக்‌ஷவுக்கும், மஹிந்தவுக்கும் அமெரிக்கா விடுத்த மறைமுக அச்சுறுத்தல்கள், அரபு நாடுகளின் / அதன் தூதுவர்களின் மிரட்டல்கள்,வெளிநாடுகளின் வன்மையான கண்டனங்கள், ஞானசார தேரரின்அமிரிக்க விசா ரத்துச் செய்யப்பட்டமை, அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பரவலான குற்றச்சாட்டுக்கள்…….

இப்படி..அதிரடியான பல நடவடிக்கைகள், மஹிந்த அரசின் நெற்றிப் பொட்டைத் தாக்க ஆரம்பித்ததில், நேற்றைவரைக்கும் பொதுபலசேனாவோடு கூடிக்குழாவி,அதை மேவிக்கொண்டிருந்தவர்களை இன்று கழுவுறமீனில் நழுவுற மீன்களாக ஆக்கியிருக்கிறது.

இத்தனை நாள் பொதுபலசேனாவோடு தோளோடு தோள் சேர்த்திருந்தவர்களில் பலர் தற்போது அதை விட்டுக் கொஞ்சம் நகர்ந்திருக்கவே முனைகிறார்கள்.

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய, இப்போதெல்லாம் தனக்கும் பொதுபலசேனாவுக்கும் எதுவிதத் தொடர்புமில்லை என்று உரத்தகுரலில் சொல்ல ஆரம்பித்திருப்பதற்கு, மேற்கூறிய காரணங்களோடு, பொது அரசியலுக்கு வரும் அவரது நோக்கமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

(பாராளுமன்ற உறுப்பினர்  ஏ.எச்.எம்அஸ்வரை ஒரு மாகாணத்தின் ஆளுநராக நியமிப்பதன் ஊடாக பாராளுமன்றில் வெற்றிடமாகும் அவரிடத்துக்கு, கோதபாய ராஜபக்‌ஷவை நியமித்து, அவருக்கு பாதுகாப்பு பிரதியமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பதவிகளை வழங்குவதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.)

அத்துடன், தான் அரசியலில் ஈடுபடப்போவதாகவும், ஹம்பாந்தோட்டையில் அன்றி கொழும்பில் இருந்தே தான் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்ய விரும்புவதாகவும் அண்மையில் அவரே குறிப்பிட்டுமிருக்கிறார்.

இந்நிலையில், ரஞ்சன் விஜேரத்ன, லலித் அதுலத்முதலி படுகொலைகளின்போது “என்னை வேண்டுமென்றால் கொலை செய்யுங்கள். ஆனால்,எனது நற்பெயரைக் கொலை செய்யாதீர்கள்” என்று முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச கூறியதற்கு ஏற்பவே,

அளுத்கம விவகாரம் மற்றும் பொதுபலசேனாவின் அண்மைக்கால அடாவடித்தனங்களின் குற்றவாளியாக சகலவிரல்களும் தன்னை நோக்கி நீண்டிருப்பதை உணர்ந்திருக்கும் பாதுகாப்புச் செயலர்,பொது அரசியலை மையப்படுத்தி தனது ‘சரிதம்’ களங்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதே நிலைப்பாட்டில்…முஸ்லிம்கள் மீதான தக்குதல்களை சரியென்று வாதிட்டு வந்த அமைச்சர்கள் விமல்வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவும்கூட பொது பலசேனாவிடமிருந்து தற்போது கொஞ்சம் ஒதுங்கியிருப்பதாகக் காட்டிக்கொள்வதை அவதானிக்க முடிகிறது.

முஸ்லிம் அடிபடைவாதிகளை வெறுப்பதாக பகிரங்கமாகவே கூறியிருக்கும் சம்பிக்க ரணவக்க, பொது பலசேனாவின் உறவை மறுத்திருக்கிறார்.

அதே போன்றுதான் . பொது பலசேனாவோடு எதுவிதத் தொடர்பும் தனக்கில்லை என்று தெரிவித்திருக்கும் விமல் வீரவன்ச, அளுத்கம வன்முறையின் பின்னணியில் அமெரிக்காவும், ஐ.தேகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொரகொடவும் இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார். மட்டுமின்றி, மிலிந்த மொரகொட ஒரு அமெரிக்க ஒற்றர் என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

எப்படியோ, ஞானசாரதேரர் ஒரு தனிமனிதரல்லர்….அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் வசதிகள்,அரச அங்கீகாரம்,பணம் (அவரது வங்கிக்கணக்கில் 340 மில்லியன் ரூபா வைப்பில் இருப்பதாகவும் தகவல்கள் உண்டு), பாதுகாப்பு என்பவற்றை அவதானிக்கும்போது, அவர் எங்கிருந்தோ, யாரோ ஏவிய அம்பு என்பது மட்டும் தெளிவாகிறது.

விமல் கூறுவதுபோல அமெரிக்கா தான் ஞானசாரரை ஏவிவிட்டிருந்தால், அமெரிக்கா அவரது விசாவை ரத்துச் செய்யவேண்டிய தேவை இருந்திருக்காது. அப்படியாயின், அவரது பின்னணியில் இருப்பது யார்?

அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுவது போல நோர்வேயும், வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளுமா?


இலங்கையில் புலிகளின் போராட்டம் இருக்கின்ற காலத்தில் தனது இனவாத செயற்பாடுகளை அடக்கி வாசித்து வந்த ஞானசாரதேரா், புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரே வீதிகளில் இறங்கி தனது போராட்டத்தை ஆரம்பித்தார்.பௌத்த பேரினவாதத்தின் அடையாளமாகவும் மாறினார்.

அவரின் செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக முஸ்லிம்களை குறிவைத்திருந்ததே தவிர தமிழ் மக்களை அவா் ஒருபோதும் தாக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதற்கு சான்றாக, ஞானசாரதேரர் அண்மையில் கொழும்பில் தமிழ் மக்களோடு வீதிக்கு இறங்கி மேற்கொண்ட ஆா்ப்பட்டத்தைக் கூறலாம்..இந்த ஆர்ப்பாட்டம் கிறிஸ்வத, முஸ்லிம் மக்களை குறிவைத்து நடாத்தப்பட்டது.

இங்கே, மதமாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்த  அவா்,.கிறிஸ்தவா்களும், முஸ்லிம்களும் இந்துக்களையும் பௌத்தா்களையும் மதம் மாற்றுவதாகவும், அவா்களுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட்டங்களைத் தொடங்க வேண்டும் என்றும் மிக ஆக்ரோசமாக உரையாற்றியிருந்தமையும் குறிப்பிட்ட புலிகளால் ஏவப்பட்ட அம்பா என்கிற சந்தேகத்தை வலுப்பெறச்செய்கிறது..

இதேநேரம், தேரவாத பெளத்த இனவாதம் வேர்விட்டிருக்கும் பர்மா,தாய்லாந்துகளின் ராணுவ ஆட்சியாளர்களா? இல்லை… பெயரளவு ஜனநாயகத்தை ஊடுருவி எழுந்திருக்கும் ராணுவ ஆட்சிக் கம்போடியாவா?இவர் பின்னணி என்றும் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

இல்லை…படிப்படியாக மக்கள் செல்வாக்கை இழந்துவரும் ‘மஹிந்தஅன்ட்கோ’,மேற்படி நாடுகளை அடியொட்டி, அவற்றின் ஆதரவோடு இலங்கையில் ராணுவ ஆட்சியொன்றை ஸ்தாபிப்பதற்கான துரும்பாகத்தான் ஞானசாரரைப் பயன்படுத்திக் கொள்கின்றனரா?

எவை எப்படியோ, மஹிந்த அரசுக்கு இலங்கை வாழ் முஸ்லிம்கள் மீது உண்மையான கரிசனை கிடையாது என்பதும், முஸ்லிம்களை அவர்கள் அரவணைத்திருப்பதாகக் காட்டிக்கொண்டிருப்பது மத்தியகிழக்கு அரபு நாடுகளின் தொழில்வாய்ப்பு மற்றும் உதவிகளுக்காகவும் என்றேபடுகிறது.(நிறைவு)
நவமணி வாரயிதழ் 2014 ஜூன்.   


No comments:

Post a Comment